விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள் செப். 23 ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகுமார் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை மேலும் கூறியது:
கேரம் விளையாட்டுப் போட்டியானது மாணவ, மாணவிகளுக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர் என இரண்டு பிரிவாக நடத்தப்படவுள்ளது. இதில், இளநிலைப் பிரிவு (மழலை வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை), முதுநிலைப் பிரிவு (6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை) அனுமதிக்கப்படுவர். மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் பள்ளிகளில் இருந்து இளநிலை ஒற்றையர் பிரிவில் ஒரு அணியும், இரட்டையர் பிரிவில் ஒரு அணியும் மற்றும் முதுநிலை ஒற்றையர் பிரிவில் ஒரு அணியும், இரட்டையர் பிரிவில் ஒரு அணியும் மட்டுமே கலந்து கொள்ளலாம். எனவே பள்ளி நிர்வாகத்தினர் சிறந்த அணிகளையே தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்க வேண்டும். மேலும் ஒற்றையர் பிரிவில் கலந்து கொண்ட வீரர், வீராங்கனைகளுக்கு இரட்டையர் பிரிவில் அனுமதி இல்லை. இப்போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பள்ளிகள் தங்களது பள்ளி மாணவ, மாணவிகளை தகுந்த வயதுச் சான்றுகளுடன் இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும். மேலும் செப். 23 ஆம் தேதி காலை 8.30 மணியளவில் விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் இருக்க வேண்டும்.
போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு பரிசுத் தொகை (காசோலையாக வழங்கப்படும்) மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.