விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்-சத்திரப்பட்டி சாலையில் புதிய ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்குசெவ்வாய்க்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.
பூமி பூஜை நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் தலைமை வகித்தார். இதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பங்கேற்றுப் பேசியது:
ஒவ்வொரு முறையும் இந்த வழியாக ரயில்கள் வந்து செல்லும்போது அடிக்கடி ரயில்வே கடவுப்பாதையை அடைப்பதால் பொதுமக்கள் சொல்லமுடியாத துன்பத்துக்கு ஆளாகி வந்தனர். இந்த இடத்தில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கடந்த ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே அரசுக்கு கோரிக்கைகளை விடுத்து வந்தனர். கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன் நான் இந்த மேம்பாலம் அமைக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து அவரிடம் விளக்கிக் கூறினேன்.
உடனடியாக ஆவன செய்வதாகக் கூறிய அவர் அதற்கான அடிப்படை ஆய்வுப்பணிகளை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த மேம்பாலம் அமைக்க ரூ.42 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளனர் என்றார்.
விழாவில் ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா முத்தையா, மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பி.பி.செல்வசுப்பிரமணியராஜா, நகரச்செயலாளர் என்.பாஸ்கரன், பூபதிராஜூ கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.ஆர்.ராதாகிருஷ்ணராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.