விருதுநகரில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் புகழுக்கு வணக்கம் என்ற தலைப்பில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட செயலாளரும், திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினருமான தங்கம் தென்னரசு தலைமை வகித்தார். அதைத் தொடர்ந்து, கருணாநிதி உருவ படத்திற்கு விருதுநகர் தெற்கு மாவட்ட செயலரும், அருப்புக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் தேர்தல் பணிக்குழு செயலாளர் பெ. செல்வேந்திரன் மற்றும் கவிஞர்கள் நந்தலாலா, நெல்லை ஜெயந்தா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கருணாநிதியின் புலமை, இலக்கியம், சொல்லாடல், அரசியல் வாழ்க்கை குறித்து விளக்கி பேசினர். இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் உள்பட வடக்கு மாவட்டத்தை சேர்ந்த பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி கழக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.