வங்கி கடனுதவி மூலம் காரைக்கால் மாவட்டத்தில் 500 கறவை மாடுகள் வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதென வெள்ளிக்கிழமை நடைபெற்ற வங்கியாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
காரைக்கால் மாவட்டத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் வங்கியாளர்கள், கால்நடைத் துறையினர் உள்ளிட்டோருடன் கலந்தாலோசிக்கும் கூட்டம் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட கூடுதல் ஆட்சியர் எம்.தினேஷ், கால்நடை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் லதா மங்கேஷ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கால்நடைகளை பராமரிக்கும் விவசாயிகளுக்கு வங்கிகளில் உள்ள திட்டங்கள் குறித்தும், வங்கிகளில் தரப்படும் கால்நடை வளர்ப்புக்கான கடனுதவி குறித்தும் வங்கி அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.
கால்நடை விவசாயிகளை ஊக்கப்படுத்த புதுச்சேரி அரசு முனைப்பு காட்டி வருகிறது. காரைக்காலில் பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதன் மூலம் கால்நடை விவசாயிகள்
லாபம் ஈட்டச் செய்ய முடியும். இதற்கு கால்டைத் துறையினர், விவசாயிகளை ஊக்கப்படுத்தவும், வங்கியாளர்கள் கறவை மாடு வாங்க தேவையான கடனுதவியை செய்யவும் முன்வர வேண்டும் என்று அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தலா 100 கறவை மாடுகளை வாங்குவதற்கு விவசாயிகளுக்கு கடனுதவி வழங்க வங்கியாளர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், நபார்டு வங்கியின் வழிகாட்டுதல்படி ஒரு நபருக்கு ரூ.90 ஆயிரம் வழங்கும். இது 2 தவணையாக தரப்படும். இதன் மூலம் தலா 10 லிட்டர் பால் கறவை கொண்ட இரு மாடுகளை வாங்க முடியும் என கால்நடைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.