காரைக்காலில் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3-ஆம் நாளாக வெள்ளிக்கிழமை தர்னா போராட்டம் நடத்தினர்.
கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு கமலேஷ் சந்திரா குழு பரிந்துரையை உடனடியாக அமல்படுத்தவேண்டும். 8 மணி நேர வேலையை உறுதிப்படுத்த வேண்டும்.
கிராமிய அஞ்சல் ஊழியர்களை துறை ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். மத்திய தீர்ப்பாயமும், சென்னை நிர்வாக தீர்ப்பாயமும் வழங்கிய தீர்ப்பின்படி, கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும். ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கும் போக்கை உயரதிகாரிகள் கைவிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
காரைக்கால் தலைமை அஞ்சல் நிலையம் முன் 3-ஆவது நாளாக நடைபெற்ற இப்போராட்டத்தில் ஊழியர் சங்கத் தலைவர் ஹரிதாஸ் தலைமை வகித்தார்.
செயலர் குமரவேல், பொருளாளர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். இதில், கிராமிய அஞ்சல் ஊழியர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.