மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து, காரைக்காலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பேரணி, ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மத்திய அரசைக் கண்டித்து தேசிய அளவில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக, காரைக்காலில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேரணி, ஆட்சியரகம் அருகே உள்ள மாதா கோயில் வீதி - அம்பேத்கர் வீதி சந்திப்பு வரை நடைபெற்றது. கட்சியின் மாவட்டத் தலைவர் எச். முகம்மது பிலால் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாநில செயலர் ஜி. அப்துல் சத்தார் பேசும்போது, மத்தியில் ஆளும் பாஜக அரசால் சிறுபான்மை மற்றும் தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இறைச்சிக்கு மாடு பயன்படுத்தக் கூடாது என கூறிவிட்டு, வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். போதுமான மருத்துவ வசதிகள் இல்லாததால் உத்தரப் பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் இறந்துள்ளனர். எதிர் கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர், துணை நிலை ஆளுநரால் அரசை முடக்கும் செயலை மத்திய அரசு செய்கிறது என்றார்.
இதில், எஸ்.டி.பி.ஐ. மாவட்டச் செயலர் சுல்தான் கௌஸ், துணைத் தலைவர் ஏ.அப்துல் சலாம், பொதுச் செயலர் தமீம் கனி, செயற்குழு உறுப்பினர் சாஹே அலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.