கால்நடை வளர்ப்பைப் போன்று லாபம் தரக்கூடிய தேனீ வளர்ப்பிலும் மக்கள் ஆர்வம் காட்டவேண்டும் என, மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் கேட்டுக்கொண்டார்.
காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் உலக தேன் தினம் மற்றும் தேனீ வளர்ப்பு குறித்த தொழில்நுட்ப பயிற்சியுடன் கூடிய சிறப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் பேசியது:
ஆடு, மாடு, கோழி வளர்ப்போர் தேனீ வளர்ப்பிலும் ஆர்வம் காட்டவேண்டும். பல்வேறு நோய்களை தீர்க்கும் காரணியாகவும், ரத்தத்தை சுத்தம் செய்யும் பொருளாகவும் தேன் விளங்குகிறது. தேனீ வளர்ப்பு அதிக லாபம் தரக்கூடியது. வீட்டிலேயே தேனீ வளர்க்க முடியும். இதற்கான பயிற்சிகள் வேளாண் அறிவியல் நிலையத்தின் மூலமும், பிற பயிற்சியாளர்கள் மூலமும் கற்றுத்தரப்படுகிறது என்றார்.
நிகழ்ச்சியில், மதுரை விபிஸ் நிறுவனத்தை சேர்ந்த நாகராஜ், காரைக்காலைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஓவிய ஆசிரியர் கிருஷ்ணன் ஆகியோர் தேனீ வளர்ப்பு குறித்து பயிற்சி அளித்தனர். மேலும், வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், மனையியல் பிரிவு உதவி தொழில்நுட்ப வல்லுநர் ஆர்.லதா உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக, 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின்
75-ஆவது ஆண்டையொட்டி புதிய இந்தியாவை படைக்கவேண்டும் என்ற உறுதிமொழியேற்கப்பட்டது.