மீனவ மாணவர்கள் கல்வி ஊக்கத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மீன்வளத் துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, காரைக்கால் மீன்வளத் துறை துணை இயக்குநர் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மீனவ மாணவர்களிடையே கல்வி கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. அதன்படி, நிகழாண்டு இந்த திட்டத்தின்கீழ் 10-ஆம் வகுப்பு மாநில பாடத்திட்டம், மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பிரெஞ்ச் பிரவேஷ் மற்றும் பிளஸ் 2 தேர்வில் 75 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு விண்ணப்பிப்பவர்கள், காரைக்கால் பகுதியில் வசிப்பவராக இருக்கவேண்டும். வருவாய்த் துறையிடமிருந்து குறைந்தது 5 ஆண்டுகள் இந்த பகுதியில் வசிப்பதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதற்கான வருவாய்த் துறை சான்றிதழ் இருக்கவேண்டும். 2016-17ஆம் கல்வியாண்டில் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் நகல் இணைக்கப்படவேண்டும். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் படித்தவராக இருக்கவேண்டும். மாணவரின் ஆதார் அடையாள அட்டை நகல் மற்றும் மாணவர் பெயரில் உள்ள வங்கிக் கணக்கு புத்தக நகல் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். செப்.8-ஆம் தேதி வரை அலுவலக நாள்களில் காரைக்கால் மீன்வளத் துறை அலுவலகத்தில், மதிப்பெண் சான்றிதழைக் காட்டி, இதற்கான விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செப். 8 -ஆம் தேதி மாலைக்குள் சமர்ப்பிக்கவேண்டும்.