விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, சட்டம் ஒழுங்கை பராமரிக்க காவல் துறையினர் சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் அறிவுறுத்தினார்.
காரைக்காலில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழா மத்தியக் குழு நிர்வாகிகள் கலந்துகொண்டு, சதுர்த்தி விழாவுக்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகளின் எண்ணிக்கை குறித்தும், 27-ஆம் தேதி விநாயகர் சிலைகள் ஒருங்கிணைக்கப்பட்டு கடற்கரை நோக்கி நடைபெறவுள்ள ஊர்வலம் குறித்தும் விளக்கிக் கூறினர். பின்னர் ஆட்சியர் பேசியது:
விநாயகர் சதுர்த்தி மற்றும் ஊர்வலத்தின் நிறைவில் பிளாஸ்டிக் கழிவுகளை நீர்நிலைகளில் விடாமல், நகராட்சி துப்புரவுப் பணியாளர்களிடம் அவற்றை சம்பந்தப்பட்டவர்கள் ஒப்படைக்க வேண்டும்.
சிலைகளுக்கு ரசாயனம் கலந்த வர்ணம் தீட்டாமல், சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத பொருள்களைப் பயன்படுத்தவேண்டும்.
விநாயகர் சிலை ஊர்வலப் பாதையில் மின்கம்பிகள் தாழ்வாக இருந்தால், அவற்றை முன்னதாகவே மின் துறையினர் சரி செய்ய வேண்டும். சட்டம் ஒழுங்கு பாதுகாப்பில் காவல் துறையினர் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என்றார்.
கூட்டத்தில் துணை ஆட்சியர் (பொ) எஸ்.கே. பன்னீர்செல்வம், தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் வம்சீதரரெட்டி, பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர் வி. சண்முகசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.