ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் 1,008 சங்காபிஷேகம்

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் திங்கள்கிழமை கார்த்திகை சோமவார நிறைவையொட்டி 1,008 சங்காபிஷேக வழிபாடு நடைபெற்றது.

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் திங்கள்கிழமை கார்த்திகை சோமவார நிறைவையொட்டி 1,008 சங்காபிஷேக வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.
ஸ்ரீ சனீஸ்வரபகவான் தனி சன்னிதி கொண்டு அருள்பாலிக்கும் திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு ஒவ்வொரு திங்கள்கிழமையும் ஸ்ரீ தர்பாரண்யேசுவரருக்கு 108 சங்காபிஷேகம் செய்யப்பட்டுவந்தது. 
கார்த்திகை மாத நிறைவு சோமவாரத்தில்  (டிச.11)  ஸ்ரீ தர்பாரண்யேசுவரர், அருள்மிகு தியாகராஜருக்கு அபிஷேகம் செய்வதற்காக 1,008 சங்குகளில் புனித நீர் நிரப்பி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பிரதான சங்குகள் மற்றும் 1008 சங்குகளை அடுக்கி விக்னேஸ்வர பூஜை நடத்தப்பட்டு, இதைத் தொடர்ந்து புன்னியாகவாஜனம் செய்யப்பட்டது. பிரதான சங்குகளுக்கும், 1008 சங்குகளுக்கும் சிறப்பு பூஜையாக, கும்ப பூஜையும், ஹோம நிறைவாக மகா பூர்ணாஹூதி தீபாராதனையும் காட்டப்பட்டது.
பூஜையில், சதுர்வேத, ஆகம ஆசீர்வாதம், தேவாரம் பாடப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் பிரதான சங்குகளை சுமந்து கோயிலின் உள் பிரகாரம் மற்றும் வெளிப் பிரகாரம் வலம் வந்து  ஸ்ரீ தர்பாரண்யேசுவரர், ஸ்ரீ தியாகராஜருக்கு மகா அபிஷேகம் செய்தனர்.
சிவபெருமானுக்கு 1,008 சங்காபிஷேகம் செய்வதை காண்பது பக்தர்களுக்கு மிகுந்த சிறப்பை சேர்க்கும் என்பதால் அபிஷேக நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். 
தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், நிர்வாக அதிகாரி (கோயில்கள்) ஏ.விக்ராந்த் ராஜா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.  திருநள்ளாறு கோயிலில் 1008 சங்கு அபிஷேகம் ஆண்டில் ஒரு முறை மட்டுமே நடத்தக்கூடியது என கோயில் நிர்வாகத்தார் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com