செல்லிடப்பேசி கோபுர செயல்பாடுகளை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து பி.எஸ்.என்.எல். அலுவலர்கள், ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்தத்தைத் தொடங்கி, செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பி.எஸ்.என்.எல். அலுவலர்கள், ஊழியர்கள் கூட்டுக் குழு சார்பில் காரைக்கால் பி.எஸ்.என்.எல். அலுவலர்கள், ஊழியர்கள் மத்திய அரசின் முடிவுகளைக் கண்டித்து டிச. 12, 13 ஆகிய தேதிகளில் 2 நாள்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கினர். போக்கைக் கண்டித்து கடற்கரை சாலையில் உள்ள அலுவலக வாயிலில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு கோட்டப் பொறியாளர் சிவராஜ் தலைமை வகித்தார். என்.எஃப்.டி.இ. அமைப்பின் தலைவர் இருதய சவுரிராஜ் பேசினார்.
நாடு முழுவதும் 70 ஆயிரம் பி.எஸ்.என்.எல். செல்லிடப்பேசி கோபுரங்கள் உள்ளன. இது பி.எஸ்.என்.எல். என்கிற நிறுவனத்தின் சொத்து. இதை தனியாக பிரித்து, துணை நிறுவனம் உருவாக்க மத்திய அமைச்சரவை பரிந்துரைத்துள்ளது. துணை நிறுவனம் என்கிறபோதே, இதை தனியார் மயப்படுத்துவதாகவே அர்த்தம் கொள்ளலாம். மத்திய அரசின் இந்த முயற்சி கண்டனத்துக்குரியது. ஒட்டுமொத்த பி.எஸ்.என்.எல். பணியாளர்களும், நாட்டு மக்களும் ஒருங்கிணைந்து இந்த முயற்சியை தடுக்க வேண்டும் என்பற்காகவே இதுபோன்ற போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதுபோல, கடந்த 10 ஆண்டுகளாக அலுவலர்கள், ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் செய்யப்படாமல் வஞ்சித்து வருகிறது. கடந்த 1.1.2017 அன்று அமைக்கப்பட்ட குழு, ஊதிய மாற்றத்தை செய்யாமல் உள்ளது. உடனடியாக பி.எஸ்.என்.எல். நிறுவனப் பணியாளர்களுக்கு ஊதிய மாற்றத்தை உறுதி செய்ய அரசு முன்வர வேண்டும் என்றார். ஆர்ப்பாட்டத்தில் அலுவலர்கள், ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர். காரைக்கால் அலுவலகத்தில் 34 நிரந்தர ஊழியர்களும், 54 ஒப்பந்தப் பணியாளர்களும் உள்ளனர்.