காரைக்கால் பகுதி அரசலாற்று ஓரத்தில் நடந்து சென்ற மூதாட்டி தவறி விழுந்து உயிரிழந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
காரைக்கால் மீராப்பள்ளித் தோட்டத்தைச் சேர்ந்தவர் நூருதீன் மனைவி ராவியத் (88). இவர், அரசலாற்றங்கரையில் தினமும் இரவு நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்.
வழக்கம்போல சனிக்கிழமை இரவு நடைபயிற்சிக்காக செல்வதாகக் கூறி சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இருள்சூழ்ந்த நிலையில் அவரது நிலையை அறியமுடியவில்லை. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வேம்படி மாரியம்மன் கோயில் அருகேயுள்ள அரசலாற்றங்கரையில் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்ததை குடும்பத்தினர் பார்த்துள்ளனர். தகவலின்பேரில் காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸார் சடலத்தை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.