புதுச்சேரி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும் என தமுமுக, மமக வலியுறுத்தியுள்ளது.
காரைக்கால் மாவட்ட தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி செயல்வீரர் கூட்டம் மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தமுமுக மாவட்ட செயலர் கமால் ஹூசைன், மமக மாவட்ட செயலர் ராஜா முஹம்மது உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, காரைக்காலில் கடந்த ஒரு வாரமாக பல கட்ட போராட்டங்களை நடத்தி வரும் உள்ளாட்சித் துறை ஊழியர்களுடன், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
காரைக்கால் மாவட்டம் முழுவதும், விபத்துகளுக்கு முக்கிய காரணியாகவும், பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் மாடு, நாய் மற்றும் பன்றிகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்மையில் வீர மரணமடைந்த தீயணைப்பு வீரர் புகழேந்தி குடும்பத்துக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவில், மாவட்ட பொருளாளர் காசிம் ராஜா நன்றி கூறினார்.