மாஹே, காரைக்கால் பிராந்திய மாணவர்கள் பங்கேற்ற சிறப்பு என்.சி.சி. முகாமில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.
தேசிய மாணவர் படை அமைப்பு (என்.சி.சி) சார்பில் ஆண்டுதோறும் என்.சி.சி. மாணவர்களுக்கான 10 நாள் சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. நிகழாண்டு காரைக்கால் மற்றும் மாஹே பிராந்தியத்தைச் சேர்ந்த என்.சி.சி. மாணவர்கள் பங்கேற்ற முகாம் காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் தொடங்கியது. 435 மாணவ, மாணவியர் இந்த முகாமில் பங்கேற்றுள்ளனர். முகாம் தலைமை அதிகாரி கர்னல் சி.எஸ்.சர்மா தலைமையில், என்.சி.சி. மாணவ, மாணவியருக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி திங்கள்கிழமை அளிக்கப்பட்டது. என்.சி.சி. அலுவலர்கள், ராணுவ பயிற்றுநர்கள் பயிற்சியை அளித்தனர்.