குளக்குடி கிராம நண்டலாறு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

குளக்குடி கிராம நண்டலாறு பகுதிக்கு 144 தடை உத்தரவை சார்பு ஆட்சியர் ஆர்.கேசவன் பிறப்பித்துள்ளார்.

குளக்குடி கிராம நண்டலாறு பகுதிக்கு 144 தடை உத்தரவை சார்பு ஆட்சியர் ஆர்.கேசவன் பிறப்பித்துள்ளார்.
காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு கொம்யூன், குளக்குடி, அண்டூர், உசுப்பூர் உள்ளிட்ட கிராமங்கள் நண்டலாற்றங்கரையில் அமைந்துள்ளன. மிகவும் தாழ்வான நிலப்பரப்பான இவற்றில், ஆண்டுதோறும் வெள்ள காலங்களில் தண்ணீர் புகுந்துவிடும். இதுபோன்ற காரணங்களால் ஆற்றில் மணல் எடுக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
குளக்குடி கிராமம் அருகே உள்ள நண்டலாற்றில் அத்துமீறி மணல் எடுத்து விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு கிராமத்தினர் புகார் அளித்தனர்.
அண்மையில் ஆற்றில் மணல் அள்ள வந்த டிராக்டரை கிராம மக்கள் பிடித்தனர். இதுதொடர்பாக இருதரப்பினருக்கும் எழுந்த பிரச்னையில் 9 பேர் மீது நெடுங்காடு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வருவாய்த்துறை அதிகாரிகள் ஆற்றங்கரைப் பகுதிக்கு சென்று மணல் எடுத்த நிலைகளை சோதனை செய்தனர். இதுகுறித்து மாவட்ட சார்பு ஆட்சியர் ஆர்.கேசவனுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் நண்டலாற்றங்கரைப் பகுதிக்கு 144 தடை உத்தரவை சார்பு ஆட்சியர் பிறப்பித்தார். இதுகுறித்து அவர் திங்கள்கிழமை  கூறியது:
நண்டலாறுக்கு தெற்கே உள்ள குளக்குடி, அண்டூர், உசுப்பூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு ஆற்றில் மணல் எடுத்துள்ளது தெரியவந்தது. எனவே இந்த கிராமங்களின் தென் கரைப் பகுதியில் மணல் எடுக்கும் வகையில் வாகனப் போக்குவரத்து உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் கூடாது. இந்தப் பகுதிக்கு மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது 2 மாதங்கள் வரை அமலில் இருக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com