திருநள்ளாறு நளன் குளம் பகுதியில் தேங்காய் அகற்றும் பணி தொடர்பாக விடப்பட்ட ஏலத்தை கைவிட்டு, மறு ஏலம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த முருகவேல் அளித்த கோரிக்கை மனு விவரம்:
திருநள்ளாறு தேவஸ்தானத்தில் நடத்தப்படும் தேங்காய் ஏலத்தில் தொடர்ந்து கலந்துகொண்டு கேட்டு வருகிறேன். கடந்த ஆண்டு 2015}16}இல் 12 மாதங்களுக்கு தேங்காய் ஏலம் விடப்பட்டதன் மூலம் கோயிலுக்கு ரூ. 14.50 லட்சம் வருவாய் கிடைத்தது. நிகழாண்டுக்கான ஏலம் கடந்த 21}ஆம் தேதி கோயிலில் நடத்தப்பட்டது. இதில் 12 மாதங்களுக்கான ஏலம் ரூ. 15.36 லட்சத்துக்கு விடப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் 19}ஆம் தேதி திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. சனிப்பெயர்ச்சி நடைபெறும் விழா ஆண்டில் இந்த ஏலத் தொகை பன்மடங்கு அதிகரிக்கும் என்பது கடந்த காலங்களின் வரலாறு.
எனவே, கோயிலுக்கு கிடைக்கும் வருவாய் பல காரணங்களால் தடைபட்டுவிட்டது. எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தி, தேங்காய் அகற்றும் பணி தொடர்பாக மறு ஏலம் நடத்த உத்தரவிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.