புதுச்சேரியில் கட்சியின் கொடி எரிக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, காரைக்காலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காரைக்கால் பிரதேச கட்சியின் சார்பில், பழைய ரயிலடி பகுதியில் நடைபெற்ற ஆர்பாட்டத்துக்கு வட்டச் செயலர் என்.எம். கலியபெருமாள் தலைமை வகித்தார்.
போராட்டத்தில் கலந்துகொண்ட கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அ. வின்சென்ட் பேசியது:
தில்லியில் பல்கலைக்கழக மாணவர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து, புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆர்ப்பாட்டப் பகுதி அருகே கட்சியின் கொடியை பாஜகவைச் சேர்ந்தோர் ஒன்று திரண்டு எரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் சிலரை கைது செய்துள்ளனர். ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்தும்போது, வன்முறையில் ஈடுபடும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளின் போக்கு கண்டனத்துக்குரியது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தில் மக்களிடையே ஒற்றுமை நிலவ வேண்டும். இதை முதல்வரும், துணை நிலை ஆளுநரும் உறுதிப்படுத்த வேண்டும் என்றார். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ராமர், திவ்யநாதன்,
எஸ்.எம். தமீம், துரைசாமி, ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.