காரைக்காலில் உலக காசநோய் தின விழிப்புணர்வு பேரணி நலவழித்துறை சார்பில் சனிக்கிழமை நடத்தப்பட்டது.
காரைக்கால் பகுதி புதுத்துறை அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்புடன், காசநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நலவழித்துறை துணை இயக்குநர் பி. நாராயணசாமி கொடியசைத்து பேரணியை தொடங்கிவைத்தார். காசநோய் விழிப்புணர்வு குறித்தும், அதற்கான கூட்டு மருந்து சிகிச்சை முறை குறித்தும், நோய தடுப்பு தொழில்நுட்ப உதவியாளர் சேகர் மாணவர்களிடையே பேசினார்.
காசநோய் விழிப்புணர்வுக்கான கருத்துகள் எழுதப்பட்ட பதாகைகள் ஏந்தி மாணவர்கள் பள்ளியிலிருந்து முக்கிய வீதிகளின் வழியே சென்றனர். கோஷங்கள் எழுப்பியவாறு சென்ற மாணவர்கள், நலவழித்துறை சார்பிலான காசநோய் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் விநியோகித்தனர். பேரணியில் பள்ளி தலைமையாசிரியர் முத்துலட்சுமி, ஆசிரியர் முகம்மதுசஃபீ, நலவழித்துறை சுகாதார ஆய்வாளர் ஆண்ட்ரூஸ், சிவவடிவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுகாதார உதவியாளர்கள் செல்வமதன், வேங்கடபதி, வெங்கட்ராமன் ஆகியோர் செய்திருந்தனர்.