பள்ளியில் நுகர்வோர் தின கொண்டாட்டம்
திருநள்ளாறு அருகே அரசுப் பள்ளியில் உலக நுகர்வோர் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
திருநள்ளாறு நுகர்வோர் நடவடிக்கைக் குழுவும், நெய்வாச்சேரி அரசு நடுநிலைப் பள்ளியும் இணைந்து நுகர்வோர் தின விழாவை பள்ளி வளாகத்தில் நடத்தின. நுகர்வோர் நடவடிக்கைக் குழுத் தலைவர் வைஜெயந்திராஜன் தலைமை வகித்து, நுகர்வோர் விழிப்புணர்வு கருத்துகளை விளக்கிப் பேசினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட காரைக்கால் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் கே. குணசேகரன், உள்ளாட்சித் துறை துணை இயக்குநர் மகாலிங்கம், என்.ஜி.ஆர். இளங்கோவன் உள்ளிட்டோர் பேசினர்.
நுகர்வோர் தினத்தையொட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு தேர்வானவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் பள்ளித் தலைமையாசிரியர் கலைவாணி, பட்டதாரி ஆசிரியர் சிங்காரவேலு, சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை நுகர்வோர் சங்க பொதுச் செயலர் ஜெயராமன், பட்டதாரி ஆசிரியர் சசிகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.