காரைக்காலில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீசுயம்வர தபஸ்வினி சமேத ஸ்ரீ பார்வதீஸ்வரசுவாமி கோயிலில் 7 நாள் நடைபெறும் சூரிய பூஜை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இத்திருக்கோயில் திருஞானசம்பந்தரால் கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் பாடல்பெற்றது. வேளாண்மை செழிப்புக்காக, கஷ்டப்பட்ட விவசாயிகளுக்காக மழை பெய்வித்து, தாமே உழவனாக வந்து தரிசனம் தந்தவர் சிவபெருமான் என்ற பெருமை இக்கோயிலுக்கு உள்ளது. இதனால் இக்கோயிலில் விதைத்தெளி உத்ஸவம் ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்படுகிறது.
அத்துடன் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 7 நாள்கள் மாலையில் சிவலிங்கத்தை சூரியன் வழிபடும் சூரிய பூஜை நடத்தப்படுகிறது.
இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் சிவலிங்கம் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. மேற்கு திசையில் சூரியன் மறையும் நேரத்தில், மாலை 5.30 மணி முதல் படிப்படியாக சூரியக் கதிர் கோயிலில் பிரவேசித்து, சிவலிங்கத்தின் மீது 6.15 மணியளவில் படர்ந்தது.
அப்போது மூலவருக்கு தீபாராதனை செய்யப்பட்டது. இக்காட்சியை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். சூரிய பூஜை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை மாலை நேரத்தில் நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.