புதுச்சேரியில் திங்கள்கிழமை காலமான முன்னாள் முதல்வர் எஸ்.ராமசாமி உடல் காரைக்காலில் புதன்கிழமை முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் எஸ்.ராமசாமி, புதுச்சேரியில் உள்ள வாணரப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் திங்கள்கிழமை காலமானார். இவரது உடல் திங்கள்கிழமை இரவு சொந்த ஊரான காரைக்கால் வீராசாமி நாயக்கர் வீதியில் உள்ள இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. காரைக்கால் அரசுத் துறை அதிகாரிகள், பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள், பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
முழு அரசு மரியாதையுடன் தகனம்: புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா, மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் வி.ஜே.சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஏ.எம்.எச்.நாஜிம், அ.மாரிமுத்து, ஏ.வி.சுப்பிரமணியன் ஆகியோர் புதன்கிழமை அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக காரைக்கால் பச்சூர் சுடுகாட்டுக்கு உடல் கொண்டுசெல்லப்பட்டது. அங்கு 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. ராமசாமியின் இளைய மகன் ராஜா சிதைக்கு தீ மூட்டினார்.