காரைக்காலில் உள்ள தொழில்முனைவோர், அரசு அலுவலர்களுடன் மத்திய அரசு செயலர் சனிக்கிழமை தொழிற்சாலைகள் அமைவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
மத்திய சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அரசு செயலர் கே.கே.ஜலான் சனிக்கிழமை காரைக்கால் வந்தார். மாவட்ட ஆட்சியரகத்தில் அவரது தலைமையில் தொழில்முனைவோர் மற்றும் அரசு அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அரசு செயலர் தேசாய், மாவட்ட சார்பு ஆட்சியர் ஆர்.கேசவன், புதுச்சேரி தொழில் வளர்ச்சி மேம்பாட்டுக் கழகம் (பிப்டிக்) மேலாண் இயக்குநர் டி.கரிகாலன், இயக்குநர் மலர்கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
காரைக்கால் மாவட்ட தொழில் மைய அதிகாரிகள், தொழிற்சாலைகள் சங்கத்தினர், தொழில்முனைவோர் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் பகுதி போலகத்தில் பிப்டிக் கையகப்படுத்தி வைத்திருக்கும் 600 ஏக்கர் நிலத்தில், தொழில் வளர்ச்சி ஏற்படுத்துவது தொடர்பாக கூட்டத்தில் மத்திய அரசு செயலர் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலப்பரப்பில் எந்த வகையான தொழில்களை அமைக்கலாம் என்ற கருத்துகளைக் கேட்டறிந்தார். சுற்றுச்சூழல் மாசு இல்லாத தொழில்கள் அமைவதற்கு முன்னுரிமை தரவேண்டும். வேலைவாய்ப்புகளை அதிகமாக ஏற்படுத்தித்தரக்கூடிய ஆட்டோ மொபைல் மற்றும் மின்னணு சாதனங்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் அமையவேண்டும் என வலியுறுத்தினர்.
சிறு, நடுத்தர தொழில்கள் இந்த நிலப்பரப்பில் அமையும்போது, இந்த தொழில்கள் நலிந்துவிடாமல் இருக்க சாலை வசதிகளை மேம்படுத்தவேண்டும் என தொழில் துறையினர்
தெரிவித்தனர்.
போலகம் தொழில் வளர்ச்சி மையத்தில் சிறு, நடுத்தர தொழில்கள் அமைவதற்கு மத்திய அரசு உரிய ஆதரவை அளிக்கும் என மத்திய அரசு செயலர்
தெரிவித்தார்.