திருநள்ளாறு கோயில் ஸ்ரீ சொர்ணகணபதி சன்னிதியில் புதிதாக வாயில் படி மற்றும் சன்னிதி முகப்பில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பித்தளை தகடு பதிக்கப்பட்டுள்ளது.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் ஸ்ரீ ஆதிகணபதி, ஸ்ரீ சொர்ணகணபதி ஆகியவை ஒரே சன்னிதியில் உள்ளன. இது ஸ்ரீ சொர்ணகணபதி சன்னிதி என்ற பெயர்கொண்டு அழைக்கப்படுகிறது.
உத்ஸவம் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளின்போது சொர்ணகணபதிக்கு தங்க கவசமும், ஆதி கணபதிக்கு வெள்ளிக் கவசமும் அணிவிக்கப்படும். சன்னிதிக்கு கூடுதல் அழகு சேர்க்கும் வகையில் கோயில் நிர்வாகத்தார், முற்றிலும் பித்தளை தகடுகளை வேலைப்பாடுகளுடன் செய்து பதித்துள்ளனர்.
இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் வெள்ளிக்கிழமை கூறியது: பித்தளை தகடு, பல்வேறு வேலைப்பாடுகளுடன் செய்து, சன்னிதிக்கு ஏறக்குடிய படிகள் முதல் தூண், சுவர் பகுதியில் பதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ரூ. 3 லட்சம் வரை செலவாகியுள்ளது. பக்தர்கள் கோயிலுக்குள் வந்ததும், ஸ்ரீ விநாயகர் சன்னிதிக்கு முதலில் சென்று வழிபடுவதால், இது பக்தர்களை ஈர்க்கும் வகையில் அழகு சேர்க்கும் வகையில் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.