காரைக்கால் நகரப் பகுதியில் சாக்கடை ஆக்கிரமிப்பை அகற்றி, உடனடியாக சாக்கடை தூர்வாரும் பணியை தொடங்கிய நகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.
காரைக்கால் தோமாஸ் அருள் வீதியின் ஓரத்தில் பிரதான சாக்கடை உள்ளது. நகரப் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர், இதன் வழியே கடற்கரையை நோக்கிச் செல்லும் வகையில் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியை பலர் ஆக்கிரமித்து கடைகளை முன்பகுதியில் நீட்டித்து நடத்தி வந்தனர். கடைகளில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் இறைச்சிக் கழிவுகளை சாக்கடையில் விட்டு வந்தனர்.
இதனால் இந்த பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் துர்நாற்றம் உள்ளிட்ட சுகாதாரக் கேடுகளால் அவதிப்பட்டுவந்து, நகராட்சி நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்தனர்.
நகராட்சி ஆணையர் டி. சுதாகர் தலைமையில் அலுவலர்கள் சென்று சாக்கடை ஆக்கிரமிப்புகளை வியாழக்கிழமை அகற்றினர்.
இதன் தொடர்ச்சியாக சாக்கடையை தூர்வாரும் பணியையும் உடனடியாகத் தொடங்கினர். இதன்மூலம் சாக்கடையில் தேங்கியிருந்த கழிவுகள் வெளியேற்றப்பட்டு, கழிவுநீர் எளிதில் செல்ல வாய்ப்பு உருவானது.
காரைக்காலில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் மழை பெய்துவருவதையொட்டி, மழைநீர் எளிதில் சாக்கடையில் கலப்பதாகவும், நகராட்சி நிர்வாகத்தின் அதிரடியான நடவடிக்கை தங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர்.