காரைக்கால் பகுதி கடலில் மாயமான மாணவரின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் லெனின் மகன் தமிழ்வாணன் (17) . தனியார் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த இவரும், நண்பர்கள் திலீப்ராஜ், பிரசன்னா ஆகியோர் வியாழக்கிழமை காரைக்கால் கடற்கரைக்குச் சென்று முகத்துவாரப் பகுதியில் இறங்கியுள்ளனர். கடல் சீற்றமாக இருந்த நிலையில், தமிழ்வாணன் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டார். நண்பர்கள் இவரை காப்பாற்ற முயற்சித்தும் பயனளிக்காத நிலையில், காரைக்கால் நகரக் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, கடலோரக் காவல் நிலையத்தினர், தீயணைப்புத் துறையினர் கடற்கரைக்குச் சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். கடலோரக் காவல் நிலைய ரோந்து படகு மூலம் தேடியும் தமிழ்வாணனை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், முகத்துவாரத்தின் தெற்கு பகுதியில் கருக்களாச்சேரி கடற்கரையில் தமிழ்வாணனின் சடலம் வெள்ளிக்கிழமை ஒதுங்கிக் கிடந்ததை அப்பகுதியினர் பார்த்து, நிரவி காவல்நிலையத்துக்கு அளித்த தகவலின் பேரில், போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பிரேத பரிசோதனைக்குப் பின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.