காரைக்கால் பகுதியில் கடந்த 2 நாள்களாக சற்று ஓய்ந்திருந்த வடகிழக்குப் பருவமழை வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் மீண்டும் தொடங்கியது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில், கடந்த 2 நாள்களாக காரைக்கால் பகுதியில் மழை சற்று ஓய்ந்திருந்தது. வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலையால் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் காரைக்கால் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. பிற்பகலுக்குப் பிறகு காரைக்கால் உள்ளிட்ட சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதன் காரணமாக, மாவட்டத்தில் மழை பாதிப்பை சரிசெய்ய அமைக்கப்பட்ட குழு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியது: நேரடி நெல் விதைப்பு செய்த நிலப்பரப்பில் கடந்த ஒரு வாரமாக மழை நீர் தேங்கத் தொடங்கியது. இதை கடந்த 2 நாள்களாக மழை நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். இந்நிலையில், தற்போது தொடங்கியிருக்கும் மழை அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன என்றனர்.