திருப்பட்டினத்தில் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்த பொது இடம் வியாழக்கிழமை மீட்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
திருப்பட்டினம் பகுதி மார்க்கெட் வீதி - வழுக்காகுள வீதி சந்திப்பில் பொது இடம் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து உச்சநீதிமன்ற வழிகாட்டுதலில் மாவட்ட சார்பு ஆட்சியர் ஏ. விக்ராந்த்ராஜா உத்தரவின்படி, திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜே. ஜான் அரேலியஸ் தலைமையில், உதவிப் பொறியாளர் எம். லோகநாதன், இளநிலைப் பொறியாளர் பி. மெய்யழகன், வருவாய் ஆய்வாளர் இ. வீரச்செல்வம், திருப்பட்டினம் வருவாய் ஆய்வாளர் மலர்விழி உள்ளிட்டோர் வியாழக்கிழமை போலீஸாருடன் அப்பகுதிக்குச் சென்று ஆக்கிரமிப்பை அகற்றினர்.
இதுகுறித்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜே. ஜான்அரேலியஸ் கூறியது: அரசுக்குச் சொந்தமான இடத்தை தனியார் ஆக்கிரமித்து வைத்திருந்த நிலையில், சார்பு ஆட்சியர் உத்தரவின்பேரில் ஆக்கிரமிப்பை அகற்றி, தூய்மை செய்துள்ளோம். ஆக்கிரமிப்புப் பகுதியில் இருந்த கிணறு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்றார்.