காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் வாகனங்களுக்கு அரசு சார்பில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இப்பணியை ஆய்வு செய்த சார்பு ஆட்சியர் ஏ.விக்ராந்த்ராஜா, தனியார் வசூல் செய்வது தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
காரைக்கால் மீன்பிடித் துறைமுகம் செயல்பாட்டுக்கு வந்தது முதல் நுழைவு வாயிலில் தனியார் சிலர் குழுவாக நின்றுகொண்டு, மீன் ஏற்றிவரும் இருசக்கர வாகனம் முதல் லாரி வரையிலான வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்துவருகின்றனர். இதில், முறைகேடு நடப்பதாக பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் உத்தரவின்பேரில், துறைமுகத்தில் மீன்வளத் துறையினரால் நுழைவுக் கட்டணம் வசூலிப்பு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதனால், தனியார் கட்டணம் வசூக்க தடை விதிக்கப்பட்டது. இருசக்கர வாகனங்களுக்கு ரூ.5, இலகு ரக வாகனங்களான சுமை ஆட்டோ போன்றவற்றிற்கு ரூ. 25 மற்றும் கனரக வாகனங்களுக்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முதல் நாளில் மாவட்ட சார்பு ஆட்சியர் ஏ.விக்ராந்த் ராஜா முன்னிலையில் மீன்வளத்துறை துணை இயக்குநர் நடேசப்பிள்ளை, நகராட்சி ஆணையர் டி.சுதாகர் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டனர்.