பி.ஆர்.டி.சி. ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் கடந்த மாதத்துக்கான ஊதியத்தை உடனடியாக வழங்கவேண்டும் என புதுச்சேரி அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக (பி.ஆர்.டி.சி) ஊழியர் சங்கப் பொறுப்பாளர் ஜி. சுப்புராஜ் சனிக்கிழமை கூறியது:
பி.ஆர்.டி.சி. நிரந்தர ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொகை 50 சதவீதம் நிலுவையில் இருக்கிறது. இதுபோல, ஊழியர்களுக்கு கடந்த அக்டோபர் மாதத்துக்கான ஊதியம் தராமல் இருந்த நிலையில், நடத்துநர், ஓட்டுநருக்கு மட்டும் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது. பிற பிரிவு ஊழியர்களுக்கு ஊதியம் இதுவரை தரப்படவில்லை.
ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பணிமனை ஊழியர்கள் என பல நிலையில் பணியாற்றக்கூடிய போக்குவரத்து ஊழியர்களுக்கு, அவரவர் வாழ்க்கை நிலையை உணர்ந்து மாதந்தோறும் ஊதியம் வழங்கவேண்டியது அவசியமாகும்.
ஆனால் போனஸாக இருந்தாலும், மாத ஊதியமாக இருந்தாலும் புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் போராடியே பெறவேண்டிய நிலை தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதுபோன்ற போக்கை அரசு நிர்வாகம் கைவிடவேண்டும்.
கடந்த 9 ஆண்டுகளாக மாநிலத்தில் 12 பெண் நடத்துநர்கள் ஒப்பந்த அடிப்படையிலேயே பணியாற்றிவருகின்றனர். இவர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும். பி.ஆர்.டி.சி. நிர்வாகம் நலிவடைந்த நிலையில் உள்ளது. புதுச்சேரி அரசு ரூ.50 கோடி சிறப்பு நிதி ஒதுக்கித்தரும்பட்சத்தில், புதிதாக பேருந்துகள் வாங்கி, புதிய மார்க்கத்தில் பேருந்துகளை இயக்கமுடியும். இதன் மூலம் பி.ஆர்.டி.சி. வருவாயை பெருக்க முடியும் என்றார் அவர்.