இலவச அரிசி வழங்காததைக் கண்டித்து நியாயவிலைக் கடையை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தை புதுச்சேரி அரசு செயல்படுத்தி வருகிறது. இதில், வசதிப்படைத்தவர்களுக்கு இலவச அரிசி வழங்க வேண்டாம் என துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அரசுக்கு அறிவுறுத்திய நிலையில், வசதிப்படைத்தவர்களின் பெயர்கள் இலவச அரிசி பட்டியலில் இருந்து அகற்றும் பணியை புதுச்சேரி அரசு மேற்கொண்டுள்ளது.
துணை நிலை ஆளுநர், இலவச அரிசி வழங்கலுக்கான ஒப்புதல் வழங்காமல் இருந்த நிலையில், பல மாதங்களாக மாதாந்திர இலவச அரிசி வழங்கும் பணி நிறுத்தப்பட்டிருந்தன. மழைக் காலமாக இருப்பதால் ஒரு மாதத்துக்கான 20 கிலோ இலவச அரிசியை மக்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு, கடந்த 15 நாள்களாக மாவட்டத்தில் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பரவலாக அரிசி வழங்கப்பட்டு வருகின்றன. காரைக்கால் நகரில் உள்ள டிராமா கொட்டகைத் தெரு, காமராஜர் நகர் நியாயவிலைக் கடையில் இலவச அரிசி வழங்கப்படவுள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட செய்தியை அறிந்து, இக்கடையில் பதிவு செய்யப்பட்ட 600 குடும்ப அட்டைதாரர்களில் பெரும்பாலானவர்கள் செவ்வாய்க்கிழமை கடைக்குச் சென்றனர். மதியம் வரை அரிசி வழங்காததால், ஆத்திரமடைந்த மக்கள் நியாயவிலைக் கடையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இக்கடைக்கு வரவேண்டிய அரிசியை, குடிமைப் பொருள் வழங்கல் துறை வேறு பகுதியில் உள்ள கடைக்கு அனுப்பிவிட்டது என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர். தகவலறிந்து குடிமைப் பொருள் வழங்கல் துறையினர், போலீஸார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், புதன்கிழமை (நவ.15) இக்கடைக்குரிய அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கப்படும் என உறுதியளித்த பிறகு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டன.