காரைக்காலில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 2-ஆவது கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவதாக ஆட்சியர் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் இதுகுறித்து புதன்கிழமை கூறியது: காரைக்காலில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் தொடர்பாக செய்யப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கை நல்ல பயனைத் தந்தது. அதுபோல தற்போதைய சூழலில் 2-ஆவது கட்ட விழிப்புணர்வு ஏற்பாடுகளைச் செய்ய நலவழித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காரைக்கால் பகுதியில் டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
நலவழித்துறையினர் தரப்பில் இதுகுறித்து கூறும்போது, நலவழித்துறையின் களப்பணியாளர்கள் மூலமாக மக்களுக்கு உரிய விழிப்புணர்வு செய்யப்படுகிறது. இருப்பினும் இந்த விழிப்புணர்வை மேலும் விரிவுபடுத்தும் விதமாக திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் விரைவில் தொடங்கும் என தெரிவித்தனர்.