ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை தங்களுக்கும் அமல்படுத்த வலியுறுத்தி உள்ளாட்சி ஊழியர்கள் விடுப்பு எடுத்து வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காரைப் பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சங்கங்களின் சம்மேளன காரைக்கால் மாவட்ட செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, காரைக்கால் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வியாழக்கிழமை ஒரு நாள் விடுப்பு எடுத்து, நகராட்சி அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளனத் தலைவர் ஐயப்பன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக அரசு ஊழியர் சம்மேளனத் தலைவர் ஜெய்சிங் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கு 7 -ஆவது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்ட நிலையில், புதுவை மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கும் ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டும்.
பலகட்ட போராட்டங்களை நடத்தியபோது, முதல்வர், உள்ளாட்சித் துறை அமைச்சர் கேட்டுக்கொண்டதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
எனினும் இதுவரை ஒப்புக்கொண்டபடி கோரிக்கையை புதுச்சேரி அரசு நிறைவேற்றாததால், விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதன் பிறகும் புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், அக்.23 முதல் தொடர் விடுப்பு எடுத்து தர்னா போராட்டத்தில் ஈடுபடுவோம் என நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன் தெரிவித்தார்.