ஓ.என்.ஜி.சி. பொதுப் பள்ளி மாணவர்களுக்கு 4 நாள் ஆளுமைத் திறன் மேம்பாட்டுக் கருத்துப் பட்டறை வியாழக்கிழமை தொடங்கியது.
காரைக்கால் பகுதி நிரவியில் இயங்கிவரும் ஓ.என்.ஜி.சி. பொதுப்பள்ளியில் 7 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, ஆளுமைத் திறன் மேம்பாட்டுக் கருத்துப் பட்டறை முகாம் வியாழக்கிழமை திருநள்ளாறு பகுதி ஓ.என்.ஜி.சி. குடியிருப்பு வளாகத்தில் தொடங்கப்பட்டது.
மாணவர்கள் பல்வேறு திறனை வளர்த்துக்கொள்ளும் அவசியம் குறித்தும், இந்த கருத்துப்பட்டறையில் நடத்தப்படவுள்ள பயிற்சிகள் குறித்தும் பள்ளி முதல்வர் சுவாமிநாதன் விளக்கிப் பேசினார்.
முதல் நாள் நிகழ்ச்சியில் 7-ஆம் வகுப்பு மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். நாகப்பட்டினம் அமிர்தா பள்ளி ஆசிரியர் செந்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவ, மாணவியருக்கு பல்வேறு கருத்துகளை விளக்கிப் பேசினார். பாரத நாட்டின் பழைமையான பெருமைகள் குறித்துப் பேசினார்.
தொடர்ந்து அடுத்தடுத்த நாள்கள் நடத்தப்படும் கருத்துப் பட்டறையில், நீதிக் கதைகள், பல விளையாட்டுப் போட்டிகள், தனித்திறனை வெளிக்கொணரும் போட்டிகள், நாட்டுப்பற்றின் மேன்மையை உணர்த்தும் வகையிலான பாடல் மாணவர்களுக்குப் பயிற்றுவித்தல், கொடுக்கப்பட்ட தலைப்புகளில் குழு கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
மாணவர்களுக்கு இதுபோன்ற பயிற்சிகள் அளிக்கும்போது, எதிர்காலத்தில் பலவித சவால்களை எதிர்கொள்ளும் வகையிலான துணிச்சல், நாட்டின் மீதான பற்றுடன் செயல்படுதல், கல்வி அறிவு மேன்மை போன்றவை கிடைக்கும் என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். பட்டறைக்கான ஏற்பாடுகளை செல்வி கிருஷ்ணன், தாஸ், உமாமகேஸ்வரி, கீதாடேனியல், செல்வதுரை, ரூபா, சிவகாமி ஆகியோர் செய்துள்ளனர்.