பட்டாசுக் கடைகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.
காரைக்கால் மாவட்டம் முழுவதும் 78 பட்டாசுக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் அதிகபட்ச சப்தம் எழுப்பக்கூடிய பட்டாசுகள், சீனப் பட்டாசுகள் விற்கப்படுவதாக உரிமம் அளித்த வருவாய்த்துறையினருக்கு புகார்கள் வந்தன. துணை ஆட்சியர் (பொ) எஸ்.கே.பன்னீர்செல்வம் உத்தரவின்பேரில், வட்டாட்சியர் ஸ்ரீஜித், துணை வட்டாட்சியர் ஆர்.செல்லமுத்து ஆகியோர் கொண்ட வருவாய்த்துறை குழுவினர் வியாழக்கிழமை பல்வேறு பட்டாசுக் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். சில கடைகள் குறிப்பிட்ட அளவைக் காட்டிலும் நீளமாக சாலைப் பகுதி வரை நீண்டு அமைக்கப்பட்டதை கண்டறிந்து, அதனை சரிசெய்ய அறிவுறுத்தினர்.
பட்டாசுக் கடை அமைந்திருக்கும் பகுதியிலிருந்து 15 மீட்டர் சுற்றளவில் தள்ளுவண்டியில் டீ மற்றும் சூப் கடை போன்றவை இருக்கக்கூடாது. மீறி ஏதும் ஆபத்து ஏற்படும்பட்சத்தில் பட்டாசுக் கடைக்காரரே பொறுப்பாக நேரிடும் எனக் கூறினர். தீயணைப்பு சாதனங்கள் கண்டிப்பாக வைத்திருக்கவேண்டும் என அறிவுறுத்திய அதிகாரிகள், முழுமையாக விதிகள் பின்பற்றப்படவேண்டும். மீறி செயல்படும்பட்சத்தில் தொடர்ந்து நடத்தப்படும் ஆய்வின் போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.