உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கவேண்டிய மானியத் தொகையை புதுச்சேரி அரசு காலம் தாழ்த்தாமல் வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சங்கங்களின் சம்மேளன செயற்குழு கூட்டம் சம்மேளனத் தலைவர் ஐயப்பன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலர் ஷேக் அலாவுதீன், இணை பொதுச் செயலர் ஜோதிபாசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், உள்ளாட்சி சட்ட விதிகளின்படி, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் வசூல் செய்யப்படும் வீட்டு வரிக்கு ஈடான மானியத் தொகையை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புக்கு புதுச்சேரி அரசு காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். சாலை மற்றும் தெரு விளக்குகள் பராமரிப்புக்குரிய மானியத் தொகை வழங்கவேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது வழங்கப்படும் ஊதிய உயர்வு, பஞ்சப்படி மற்றும் அரசின் சலுகைகளை வழங்கும் அதே நேரத்தில் உள்ளாட்சி ஊழியர்கள், தினக்கூலி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் அமல்படுத்தவேண்டும்.
இக்கூட்டத்தில் சம்மேளன பொருளாளர் கலைச்செல்வம், கெளரவத் தலைவர் வெங்கடாசலம், துணைத் தலைவர் உலகநாதன், துணை செயலர்கள் நாகப்பன், சண்முகராஜ், காளிதாஸ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். சம்மேளன துணைச் செயலர் திவ்யநாதன் நன்றி கூறினார்.