உள்ளாட்சித் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளன தலைவர் ஓ. ஐயப்பன் மற்றும் அரசு ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன் ஆகியோர் கூட்டாக சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரி மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வலியுறுத்தி அக். 23 முதல் புதுச்சேரி மாநிலம் முழுவதும் அனைத்து நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் நமச்சிவாயம், உள்ளாட்சி செயலர் ஜவஹர், உள்ளாட்சித் துறை இயக்குநர் முஹம்மது மன்சூர் ஆகியோருடன் புதுச்சேரி மாநில அரசு ஊழியர் சம்மேளன நிர்வாகிகள் மற்றும் புதுச்சேரி மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளன நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், ஒரு வாரத்துக்குள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அமைச்சர் வாக்குறுதி அளித்தமையால், அக்.23 முதல் நடைபெறுவதாக இருந்த உள்ளாட்சி ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் தாற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது என அதில் கூறியுள்ளனர்.