பணி நீக்கம் செய்யப்பட்ட பொதுப்பணித் துறை முன்னாள் ஊழியர்கள், மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி அரசின் பொதுப்பணித் துறையில் முந்தைய ரங்கசாமி ஆட்சியின்போது, குறிப்பாக 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை சுமார் 2,600 ஊழியர்கள் தாற்காலிக அடிப்படையில் சேர்க்கப்பட்டனர்.
தேர்தலை கருத்தில்கொண்டு இவர்கள் சேர்க்கப்பட்டதாகவும், இவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்ததையொட்டி, தாற்காலிக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்களில் காரைக்காலை சேர்ந்த 498 பேரும் அடங்குவர். இந்நிலையில், புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், தங்களுக்கு மீண்டும் பணி வழங்கவேண்டும் என வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை முன்னாள் தாற்காலிக ஊழியர்கள் நடத்திவருகின்றனர். இதன்தொடர்ச்சியாக, காரைக்கால் மாவட்ட ஆட்சியரகம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஊழியர் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் எஸ். வினோத் தலைமை வகித்தார். பொறுப்பாளர்கள் கலியமூர்த்தி, ஆனந்த், சத்யரூபன், பிரவீன், சக்திவேல், புதுவை லெனின் பாஸ்கர் உள்ளிட்டோர், கருணை அடிப்படையில் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கவேண்டும் என வலியுறுத்திப் பேசினர்.
மேலும், இந்த விவகாரத்தில் புதுச்சேரி முதல்வர் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆகியோர் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் எனவும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.