அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கவேண்டும் என அரசை வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் நிர்மலா ராணி அரசு உதவிப் பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அ.வின்சென்ட், செயற்குழு உறுப்பினர்கள் கே. வீரப்பிள்ளை, ஐ. அப்துல்ரஹீம் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவனை சனிக்கிழமை சந்தித்து அளித்த கோரிக்கை மனு:
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிப் பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்குரிய மாத ஊதியத்தை வழங்குவதில் அரசு தாமதம் செய்துவருகிறது. பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. தகுதியானவர்களை முதிர்ச்சி அடிப்படையில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யவேண்டும்.
நிர்மலா ராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் பணிபுரியும் 41 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களில், 32 பேருக்கு மட்டுமே அரசு ஊதியம் வழங்குகிறது. எஞ்சிய 9 பேருக்கு கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், ஆசிரியர்கள் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, நிலுவையின்றி ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.