சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தையொட்டி காரைக்கால் கடற்கரையில் அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் மாணவர்களுடன் தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் இருவார தூய்மை சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, சர்வதேச கடற்கரை தூய்மை தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, காரைக்கால் கடற்கரையில் நடைபெற்ற விழிப்புணர்வு மற்றும் தூய்மைபடுத்தும் நிகழ்ச்சியில் வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன், ஆட்சியர் ஆர். கேசவன், கூடுதல் ஆட்சியர் எம். தினேஷ், கடலோரக் காவல்படை கமாண்டன்ட் சோமசுந்தரம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் மாணவர்களுடன் கடற்கரைப் பகுதியை துப்புரவுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய அமைச்சர், சுகாதாரம் என்பது வீட்டிலிருந்து தொடங்கினால் அது நல்ல பயனைத் தரும். இதற்கு மாணவர்கள் உதவவேண்டும். குறிப்பாக கடற்கரைப் பகுதி தூய்மையாக, சுகாதாரமாக இருக்கவேண்டியது மிகவும் அவசியம் என்றார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் காரைக்காலில் திடக் கழிவு மேலாண்மைத் திட்டப் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு சீருடையை அமைச்சர் வழங்கினார்.
இதேபோல், திருமலைராயன்பட்டினம் பகுதி பட்டினச்சேரி கடற்கரையில் சட்டப்பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன் தலைமையில் நடைபெற்ற தூய்மைப் பணியில், சுமார் 150
மாணவ மாணவியர், திருமலைராயன்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் கலந்துகொண்டனர்.