நூற்பாலைத் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கக்கோரி, காரைக்காலில் நூற்பாலைத் தொழிலாளர்கள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால் மாவட்டம், மேலஓடுதுறையில் ஜெயபிரகாஷ் நாராயணன் கூட்டுறவு நூற்பாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு கடந்த 17 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அதிகாரிகளிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், எந்தவித பலனும் ஏற்படவில்லை. இந்நிலையில், நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கக்கோரி, நூற்பாலைத் தொழிலாளர்கள் சங்கத்தலைவர் குமார் தலைமையில் திங்கள்கிழமை உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
இது குறித்து ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 17 மாதமாக சம்பளம் வழங்கப்படாததால், குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கக் கூட பணமில்லாமல், சிரமப்பட்டு வருகிறோம். இதே நிலை நீடித்தால், தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. எனவே, நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.