ஸ்ரீதர்பாரண்யேசுவரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேசுவரர் கோயிலில் திங்கள்கிழமை கார்த்திகை சோமவார நிறைவையொட்டி 1008 சங்காபிஷேக வழிபாடு நடைபெற்றது. 

திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேசுவரர் கோயிலில் திங்கள்கிழமை கார்த்திகை சோமவார நிறைவையொட்டி 1008 சங்காபிஷேக வழிபாடு நடைபெற்றது. 
ஸ்ரீசனீஸ்வர பகவான் தனி சன்னிதி கொண்டு அருள்பாலிக்கும் திருநள்ளாறு ஸ்ரீபிரணாம்பிகை சமேத  ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி, ஒவ்வொரு திங்கள்கிழமையும்  ஸ்ரீ தர்பாரண்யேசுவரருக்கு 108 சங்காபிஷேகம் செய்யப்பட்டுவந்தது. கார்த்திகை மாத நிறைவு சோமவாரமான  திங்கள்கிழமை (டிச.10) ஸ்ரீ தர்பாரண்யேசுவரர், அருள்மிகு தியாகராஜருக்கு அபிஷேகம் செய்வதற்காக 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 
பிரதான சங்குகள் மற்றும் 1008 சங்குகளை அடுக்கி விக்னேஸ்வர பூஜை நடத்தப்பட்டு, தொடர்ந்து புன்னியாகவாஜனம் செய்யப்பட்டது. பிரதான சங்குகளுக்கும், 1008 சங்குகளுக்கும் சிறப்பு பூஜையாக, கும்ப பூஜையும், ஹோம நிறைவாக மகா பூர்ணாஹுதி தீபாராதனையும் நடைபெற்றது. பூஜையில், சதுர்வேத, ஆகம ஆசீர்வாதம், தேவாரம் பாடப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் பிரதான சங்குகளை சுமந்து கோயிலின் உள்பிராகாரம் மற்றும் வெளிப் பிராகாரம் வலம் வந்து  ஸ்ரீதர்பாரண்யேசுவரர், ஸ்ரீ தியாகராஜருக்கு மகா அபிஷேகம் செய்தனர்.
இதில், தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி (கோயில்கள்) ஏ.விக்ரந்த் ராஜா செய்திருந்தார்.  திருநள்ளாறு கோயிலில் 1008 சங்காபிஷேகம் ஆண்டில் ஒரு முறை மட்டுமே நடத்தக்கூடியது என கோயில் நிர்வாகத்தார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com