பிரான்ஸ் நாட்டின் வேளாண் கல்லூரியிலிருந்து மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட 16 பேர், இந்திய வேளாண்மை குறித்து தெரிந்துகொள்ளவும், பிரான்ஸ் வேளாண்மை குறித்து உள்ளூர் விவசாயிகள், மாணவர்களிடம் தெரிவிக்கவும் காரைக்கால் வந்தனர்.
பிரான்ஸ் நாட்டில் உள்ள லைசி அக்ரிகோல் கல்லூரியிலிருந்து பேராசிரியர்கள் ஃபேபியன், சிரில் ஆகியோருடன் வேளாண் பட்டயக் கல்வி முதலாமாண்டு மாணவர்கள் 14 பேர் என மொத்தம் 16 பேர் கொண்ட குழுவினர், ஒரு மாத கால முகாமாக, 10-ஆம் ஆண்டாக காரைக்காலில் உள்ள பண்டித ஜவாஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தனர்.
கல்லூரியில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொ) கா.உமர் ஹத்தாப் தலைமை வகித்தார். காரைக்கால் கல்லூரி உழவியல் துறை பேராசிரியர் ரா.பூங்குழலன் வரவேற்றார். பின்னர் காரைக்கால் பகுதியில் நடைபெறும் நெல் சாகுபடியை மாணவர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதுகுறித்து கல்லூரி பேராசிரியர்கள் கூறியது: பிரான்ஸ் குழுவினர் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் சுற்றுப் பயணம் செய்து நெல், தென்னை, வாழை மற்றும் தோட்டப் பயிர் சாகுபடி முறைகள் குறித்து அறிந்துகொள்ள உள்ளனர். புதுச்சேரியில் விவசாயிகள் வீட்டில் 5 நாள்கள் தங்கி வேளாண் விவரங்களைப் பகிர்ந்துகொள்வார்கள். தமிழகத்தில் உள்ள வேளாண் சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெறவும் உள்ளனர் எனத் தெரிவித்தனர்.
வேளாண் பொருளியல் மற்றும் விரிவாக்கத் துறைத் தலைவர் ஏ.ஷேக்அலாவுதீன் நன்றி கூறினார்.