காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் மாசி மக பிரமோத்ஸவத்திற்கான பந்தல்கால் முகூர்த்தம் புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜ பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி மாசி மக தீர்த்தம் அளிப்பது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் காரைக்கால், நிரவி, திருமலைராயன்பட்டினம், திருமருகல் பகுதி கோயில்களில் இருந்து பெருமாள் சிறப்பு பல்லக்கில் கடற்கரைக்கு எழுந்தருளுவார்கள்.
இந்தத் திருவிழா பிரமோத்ஸவமாக பெருமாள் கோயில்களில் கொண்டாடப்படுகிறது. காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் இவ்விழா தொடங்குவதற்காக பந்தல்கால் முகூர்த்தம் புதன்கிழமை நடைபெற்றது. சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ஸ்ரீ கைலாசநாதர், ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயில் அறங்காவலர்கள் மற்றும் உபயதாரர்கள், முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் பந்தல்காலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கோயில் வளாகத்தில் நடப்பட்டது.
நிகழ்ச்சியையொட்டி மூலவர், உத்ஸவருக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் உ.வே.கு.அரங்கநாதாச்சாரியார் சுவாமிகள், கோயில் அறங்காவல் குழுத் தலைவர் ஆர்.கேசவன், செயலர் எம்.பக்கிரிசாமி, பொருளர் டி.ரஞ்சன், உறுப்பினர் கே.பிரகாஷ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
வருகிற 19-ஆம் தேதி திங்கள்கிழமை கொடியேற்றம் நடைபெறுகிறது. மார்ச் 1-ஆம் தேதி திருமலைராயன்பட்டினம் கடற்கரையில் மாச மக தீர்த்தவாரியும், 3-ஆம் தேதி தெப்பம், 4-ஆம் தேதி புஷ்பபல்லக்குடன் விடையாற்றி நிகழ்ச்சி நடைபெறுகிறது.