காரைக்கால் கல்லூரியில் முதலாமாண்டு, இரண்டாமாண்டு பயிலும் மாணவர்கள் சிலரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்தார். போலீஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதியை சேர்ந்தவர் கலையரசன் (21). இவர் காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பி.ஏ., படித்து வருகிறார்.
இதே கல்லூரியில் திருப்பட்டினம் பகுதியை சேர்ந்த தில்லைகணேஷ் (19), கீழகாசாக்குடிமேடு கிராமத்தை சேர்ந்த ராமன்(19) ஆகியோரும் முதலாமாண்டு படித்து வருகின்றனர். கடந்த 17-ஆம் தேதி அன்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும், 2-ஆம் ஆண்டு மாணவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த கல்லூரி முதல்வர், மாணவர்களை அழைத்து சமரசம் செய்து அனுப்பியுள்ளார். இந்நிலையில் வார விடுமுறை முடிந்து திங்கள்கிழமை கல்லூரி வழக்கம்போல் இயங்கியது. கல்லூரிக்கு வந்த ராமன், தில்லைகணேஷ் ஆகியோர் 2-ஆம் ஆண்டு மாணவர் கலையரசனிடம் தகராறு செய்துள்ளனர். இதில் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றி, தில்லைகணேஷ், ராமன் ஆகியோர் சேர்ந்து கையில் வைத்திருந்த கத்தியால் கலையரசனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் கலையரசன் காயமடைந்தார். அவரை காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த மாணவர் கலையரசன் காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், ஆய்வாளர் ஏழுமலை, உதவி ஆய்வாளர் மோகன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.