காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன செயற்குழுக் குழு கூட்டம் வியாழக்கிழமை தலைவர் சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன் செயல் அறிக்கையினை தாக்கல் செய்து பேசினார்.
செயற்குழுக் குழு கூட்டத்தில் அரசு, உள்ளாட்சி மற்றும் அரசு சார்ந்த துறைகளின் பல்வேறு பிரச்னைகள் சம்பந்தமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உள்ளாட்சி, தன்னாட்சி, பொதுத்துறை மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஊழியர்களுக்கு 7- வது ஊதியக்குழு பரிந்துரைகளை வழங்க அரசு முன்வரவேண்டும்.
காரைக்கால் பகுதியில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு உரிய ஜி.பி.எஃப் எனும் பொது வைப்பு நிதியை பெறுவதற்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்படும் அனுமதி ஆணை கோப்புகள் மிக தாமதமாக மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து வெளிவருவதாக அறிய முடிகிறது. பொது வைப்பு நிதியில் இருந்து ஊழியர்கள் முன் தொகை அனுமதி ஆணை உத்தரவு பெற அனுப்பப்படும் கோப்புகளை காலதாமதமின்றி ஆணை பிறப்பித்து சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
சம்மேளனத்திற்குட்பட்ட அனைத்து இணைப்பு சங்கங்களின் அமைப்பு தேர்தலை நடத்துவது. 7-ஆவது ஊதியக்குழுவை அமல்படுத்த வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உள்ளாட்சி ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற காலதாமதம் செய்தால், பொங்கல் பண்டிகைக்கு பிறகு உள்ளாட்சி ஊழியர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக அரசு ஊழியர் சம்மேளனம் சார்பில் மிகப் பெரிய அளவில் அனைத்து சங்கங்களையும் இணைத்து பேரணி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
சம்மேளன கெளரவத் தலைவர்கள் ஜார்ஜ், ஜெய்சிங் உள்ளிட்டோர் பேசினர். பொருளாளர் மயில்வாகனன் நன்றி கூறினார்.