இந்தோனேஷியாவில் நடைபெறவுள்ள சர்வதேச கராத்தே போட்டியில் பங்கேற்க, காரைக்காலைச் சேர்ந்த இரட்டையர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
காரைக்கால் பகுதியைச் சேர்ந்த7 வயதான இரட்டையர்கள் ஸ்ரீவிசாகன், ஸ்ரீஹரிணி. இவர்கள் காரைக்காலில் செயல்படும் வி.ஆர்.எஸ். மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாதெமியில், மாஸ்டர் வி.ஆர்.எஸ். குமாரிடம் கராத்தே, டேக்வாண்டோ, கிக்பாக்ஸிங், சிலம்பம், குபுடோ ஆகியவற்றை கடந்த 5 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வருகின்றனர்.
பயிற்சி மூலம் இருவரும் கடந்த 2017-ஆம் ஆண்டு பிளாக் பெல்ட் பட்டம் பெற்றனர். மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேச அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று 70-க்கும் மேற்பட்ட பதக்கங்களைப் பெற்றுள்ளனர். ஜன. 8-ஆம் தேதி காரைக்காலில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே, குங்பு போட்டியில் இந்த இரட்டையர்கள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
இப்போட்டியில், இரட்டையர்கள் அதிகளவில் பதக்கம் வென்றதன் மூலம் நிகழாண்டு ஏப்ரல் மாதம் இந்தோனேஷியாவில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டிகளில் பங்கேற்கத் தேர்வாகியுள்ளதாக, அகாதெமி இயக்குநரும், பயிற்சியாளருமான வி.ஆர்.எஸ். குமார் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.