இசை வேளாளர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தல்
புதுச்சேரி மாநிலத்தில் இசை வேளாளர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்ட இசை வேளாளர்கள் சங்கத் தலைவர் டி.ஆர்.பாலசுப்ரமணியன், செயலர் கே.பலராமன் ஆகியோர் புதன்கிழமை கூட்டாக வெளியிட்ட அறிக்கை :
புதுச்சேரி முதல்வர், கலை பண்பாட்டுத்துறை அமைச்சர், வேளாண் துறை அமைச்சருக்கு கோரிக்கைகள் அடங்கிய மனு தரப்பட்டது. தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் இசை வேளாளர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டும். புதுச்சேரி கலை பண்பாட்டுத்துறையின் கலைமாமணி, தமிழ்மாமணி விருது பெற்றவர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை, இலவச பேருந்து சலுகைக்கான அட்டை, இலவச மருத்துவ சிகிச்சை வசதிகளை செய்துத்தருமாறு கோரிக்கைகளாக அதில் கூறப்பட்டது.
இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக முதல்வர், அமைச்சர்கள் தெரிவித்திருப்பது பாராட்டுக்குரியது என அதில் கூறப்பட்டுள்ளது.