தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து காரைக்காலில் புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக்கழகப் பேருந்துகள் வெள்ளிக்கிழமை இயக்கப்படவில்லை.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து, முழு அடைப்புப் போராட்டத்தை திமுக வெள்ளிக்கிழமை நடத்தியது. புதுச்சேரியில் இந்தப் போராட்டத்திற்கு ஆளும் கட்சியான காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. இதையொட்டி புதுச்சேரியில் அரசுப் போக்குவரத்துக் கழகமான பி.ஆர்.டி.சி. பேருந்துகள் இயக்கப்படவில்லை.
காரைக்காலில் முழு அடைப்புப் போராட்டம் இல்லாத நிலையில், காரைக்காலில் இருந்து வெளியூருக்கு இயக்கப்படவேண்டிய அனைத்துப் பேருந்துகளையும் பணிமனையில் நிறுத்திவைத்தனர். நகரப் பகுதியிலும், கிராமப்பகுதியிலும் சில பி.ஆர்.டி.சி. சிற்றுந்துகள் மட்டும் காலையில் இயக்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் தரப்பில் கூறும்போது, தூத்துக்குடி சம்பவத்தையொட்டி நடத்தப்படும் போராட்டத்திற்கு ஆதரவாகவே பேருந்துகள் நிறுத்தப்பட்டன. காரைக்காலில் இருந்து புதுச்சேரி உள்ளிட்ட எந்தப் பகுதிக்கும் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்றனர். காரைக்காலில் பி.ஆர்.டி.சி. பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், தமிழக அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட்டன.