தமிழக அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது பாரபட்சம் இன்றி, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்னார்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்க செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கூட்டத்துக்கு சங்கத் தலைவர் ச. கோவிந்தராஜன் தலைமை வகித்தார். இதில், தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கல்வி கட்டண விவரத்தை அறிவிப்புப் பலகையில் ஒட்ட வேண்டும். அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் தேவையில்லாமல் பல்வேறு பயிற்சிகள் வழங்குவதாகக் கூறி கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவேண்டும். மாவட்டக் கல்வித்துறை தகுந்த ஆய்வுக்குழு மூலம் தொடர்ந்து பள்ளிகளைக் கண்காணிக்க வேண்டும். வடசேரி சாலையில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான எரிவாயு தகன மேடை, தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.
அத்துடன், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், நுகர்வோர் சங்கப் பொதுச்செயலர் சா. சம்பத், செயற்குழு உறுப்பினர்கள் ச. நவநீதம், டி. இளங்கோவன்,டி. தான்யா, வி. கூத்தையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.