தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் திமுக சார்பில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.
தமிழகம், புதுச்சேரியில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து திமுக சார்பில் கடையடைப்பு நடத்த அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே பழைய ரயிலடி பகுதியில் திமுக காரைக்கால் அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச். நாஜிம் தலைமையில், திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் நலனுக்கு எதிரான தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடவேண்டும், ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் மக்கள் நடத்திய பேரணியின்போது, துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்துக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பதவி விலகவேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், திராவிடர் கழகம், மதிமுக, படைப்பாளி மக்கள் கட்சியினர் பங்கேற்றனர்.